பரேலி, (உத்தரப்பிரதேசம்) மார்ச் 30- கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது. தில்லி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் வேலை பார்த்து வந்த லட்சகணக்கான மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பி வருகின்றனர். உத்தரபிரதேசம், பீகார் மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர். உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் சொந்த ஊர் திரும்பிய ஆயிரகணக்கானவர் மீது கொரோனா அச்சத்தால் கிருமி நாசினி அடிக்கப்படுகிறது. லக்னோவிலிருந்து சுமார் 270 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் ஒன்றிலிருந்து திரும்பியவர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், சாலையில் அமர்ந்திருக்கும் பெண்கள், குழந்தைகள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. அதில் ஒருவர் பெண்கள், குழந்தைகள் அனைவரும் கண்களை மூடுங்கள் என உத்தரவிடுகிறார். இந்த சம்பவம் குறித்து பேசிய அதிகாரி ஒருவர்:- "பெண்கள், குழந்தைகள் மீது தண்ணீரில் குளோரின் கலந்து தெளிக்கப்பட்டது. வேறெந்த இரசாயனத்தையும் பயன்படுத்தவில்லை. கண்களை மட்டும் மூடிக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம் என்றார். மேலும் வியாக்கியானம் செய்த அந்த அதிகாரி, "நாங்கள் மனிதாபிமானமற்றவர்கள் என்று அர்த்தமல்ல ... அனைவரையும் தூய்மைப்படுத்துவது முக்கியம், சிறந்தது என்று நினைத்ததைச் செய்தோம் என்றார்.